உலகம்

கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது மெட்டா: ஈரான் குற்றச்சாட்டு

Published On 2024-03-10 09:31 GMT   |   Update On 2024-03-10 09:31 GMT
  • மெட்டா-வின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இயங்கி வருகின்றன
  • கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்

உலகெங்கும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில், அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்கள் முன்னணியில் உள்ளன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தங்கள் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடைய இவற்றை பயன்படுத்துகின்றனர்.

மெட்டா எனும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்த 2 தளங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.

ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் "விபிஎன்" (VPN) மூலம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் "அயதுல்லா அலி கமேனி" (Ayatollah Ali Khamenei) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை, கடந்த மாதம், மெட்டா நீக்கியது.


இதற்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தற்போது இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் (Hossein Amir-Abdollahian) தெரிவித்ததாவது:

கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி.

கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரசாரங்கள் செய்கின்றன.

ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.

தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News