உலகம்

வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

Published On 2023-12-07 15:51 GMT   |   Update On 2023-12-07 15:51 GMT
  • நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியம்.
  • சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.

வனாடு அல்லது வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுகள், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

இந்நிலையில், வனாடுவின் தெற்கே இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிடுகையில், "நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியமாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.

பூகம்பங்கள், புயல் சேதம், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக வனாடு உள்ளதாக உலக இடர் அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News