உலகம்
மகிந்த ராஜபக்சே

இலங்கை வன்முறை: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க தயார்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தகவல்

Published On 2022-05-21 06:00 GMT   |   Update On 2022-05-21 06:00 GMT
இலங்கையில் வன்முறையை தூண்டி விட்டதாக மகிந்த ராஜபக்சே உள்பட 7 பேர் மீது கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ராஜ பக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் முண்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சே, முன்னாள் மத்திரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இதையடுத்து மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் தலைநகர் கொழும்பில் இருந்து திரிகோணாமலை கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

சமீபத்தில் மகிந்த ராஜபக்சே கொழும்புக்கு சென்று ரகசிய இடத்தில் தங்கினார். பின்னர் அவர் பாராளுமன்றத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதற்கிடையே இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கிறார்கள். வன்முறையை தூண்டி விட்டதாக மகிந்த ராஜபக்சே உள்பட 7 பேர் மீது கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர்களை கைது செய்ய உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக எம்.பி.க்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மேலும் நமல் ராஜபக்சே எம்.பி. உள்பட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த வன்முறை குறித்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள். போலீசாரிடம் எந்த நேரத்திலும் நான் வாக்குமூலம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும்.

பாராளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News