செய்திகள்

இந்தியா சொன்ன இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் எதுவும் இல்லை- பாகிஸ்தான் அறிவிப்பு

Published On 2019-03-28 09:47 GMT   |   Update On 2019-03-28 09:47 GMT
பாகிஸ்தானில் 22 இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் இருப்பதாக இந்தியா கூறியதைபோல், எவ்வித தடயமும் இல்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.#PulwamaAttack #PakistanGovernment
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா சில ஆதாரங்களை, பாகிஸ்தான் அரசிற்கு சமர்ப்பித்தது. இந்த கோப்புகளை ஆராய்ந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு குறித்து, இந்தியா  6 பகுதிகளாக 91 பக்கங்கள் உடைய  ஆவணங்களை சமர்ப்பித்தது. இந்த ஆவணத்தொகுப்பில் பாகிஸ்தான் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள் பல உள்ளன. முற்றிலும் பாராமல், புல்வாமா தாக்குதல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மட்டும் தனியே எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



இவற்றில் பாகிஸ்தானில் 22 இடங்களில் பயங்கரவாதிகள் முகாமிட்டு செயல்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் எவ்வித முகாம்களும் இல்லை. இந்தியா இந்த இடங்களை பார்வையிட விரும்பினால், பாகிஸ்தான் அரசு அனுமதிக்க தயாராக உள்ளது. 

மேலும் இந்த தாக்குதலில் தொடர்புள்ளதாக கூறப்பட்ட 54 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த விவரங்களை விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெளிவாக கூறுகின்றனர்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#PulwamaAttack #PakistanGovernment
Tags:    

Similar News