செய்திகள்

இலங்கை மந்திரிகள் நியமனத்தில் அதிபருடன் கருத்துவேறுபாடு உள்ளது - பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒப்புதல்

Published On 2018-12-22 20:43 GMT   |   Update On 2018-12-22 20:43 GMT
இலங்கை மந்திரிகள் நியமனத்தில் அதிபர் சிறிசேனாவுடன் கருத்துவேறுபாடு உள்ளது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒப்புக்கொண்டார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
கொழும்பு:

இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே கடந்த 16-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் எதிர்பாராத தாமதமாக 3 நாட்கள் கழித்து 30 பேர் கொண்ட மந்திரிகள் பட்டியலை கடந்த வியாழக்கிழமை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

அதில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பரிந்துரைத்த சிலரது பெயர்கள் ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு படைகள் மற்றும் போலீஸ் இலாகாவை அதிபர் சிறிசேனாவே வைத்துக்கொண்டார். இது அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே அதிகார மோதல் இருப்பதை காட்டியது.



இதுபற்றி விக்ரமசிங்கே கூறியதாவது:-

சில ஊடகங்கள் போலியான மந்திரிகள் பட்டியலை வெளியிட்டதுடன், அதனை அதிபர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் செய்தி வெளியிட்டன. இலங்கை சுதந்திரா கட்சி உறுப்பினர் விஜித் விஜயமுனி சோய்சாவை நான் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அவர் பெயர் மந்திரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் சில ஊடகங்கள் வெளியிட்டன.

இதன்மூலம் மக்களை திசைதிருப்ப அவை முயற்சித்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிகள் நியமனத்தில் அதிபருடன் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் மந்திரிசபை நியமனம் எப்படி நடந்தது என்பது பற்றி பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
Tags:    

Similar News