செய்திகள்
இறுதி கட்டத்தில் டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர் மீதான வழக்கு - அமெரிக்க அரசியலில் புயலடிக்க வாய்ப்பு
அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு புகார் டிரம்ப்புக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில், அவரது முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் மீதான முறைகேடு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. #PaulManafort #Trump
வாஷிங்டன்:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்.பி.ஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, கடந்தாண்டு அதிபர் டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது,
இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நிதிமோசடி உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனை அடுத்து, தலா 5 மில்லியன் டாலர் ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிமன்றம் வீட்டுக்காவலில் வைத்தது.
இந்நிலையில், விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா கோர்ட்டில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்தது. இதனை அடுத்து, வழக்கு குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க 12 ஜூரிக்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். (அமெரிக்க சட்ட முறைப்படி வழக்கின் தீர்ப்பை ஜூரிக்களின் கருத்தை வைத்தே நீதிபதிகள் அறிவிப்பர்)
12 ஜூரிக்களும் வழக்கு தொடர்பாக விவாதித்து வருகின்றனர். இந்த வழக்கில் பால் மானாபோர்ட் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அது டிரம்ப்புக்கு பெரிய அடியாக அமையும். கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை பதவி விலக வைக்கவும் முடியும். இதனால், இந்த வழக்கின் தீர்ப்பை அமெரிக்காவே உற்று நோக்கியுள்ளது.