இந்தியா

41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் - சி.டி.ஆர். நிர்மல் குமார்

Published On 2025-12-31 13:03 IST   |   Update On 2025-12-31 13:05:00 IST
  • இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள்.
  • சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.

கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணை யில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்கள் நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பி ரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது.

தொடர்ந்து இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.

இதையடுத்து த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* டெல்லியில் 3 நாட்களாக நடந்து வந்த விசாரணை நிறைவடைந்தது.

* சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.

* எங்களிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்துள்ளோம்.

* தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் அழைப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News