செய்திகள்

சீனாவில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- போக்குவரத்து முடங்கியதால் மக்கள் அவதி

Published On 2018-07-14 07:17 GMT   |   Update On 2018-07-14 07:17 GMT
சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய்:

சீனாவில் கடந்த சில நாட்களாக பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 24 மாகாணங்களில் உள்ள 241 ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

சிச்சுவானின் மின் நதியில் கட்டப்பட்டிருந்த பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலங்கள் உடைந்துள்ளன. ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.


மழை பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மழை தொடர்பான விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக 387 கோடி டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


இதற்கிடையே, இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு அதிகமாகி, நிலச்சரிவும் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. #ChinaRain
Tags:    

Similar News