செய்திகள்
ஏமன் புயலில் சிக்கிய இந்தியர்களை காப்பாற்றிய இந்திய கப்பற்படை
ஏமன் நாட்டில் உள்ள சொகோட்ரா தீவில் ஏற்பட்ட புயலில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்திய கப்பற்படை இன்று மீட்டுள்ளது. #Cyclone #Omen #Yemen
சனா :
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.
மெகுனு புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.
அவர்களை மீட்க இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சுனைனா என்ற கப்பல் ஏமன் நாட்டுக்கு விரைந்தது. அங்கு புயல் பாதிப்பினால் சிக்கித்தவித்த 38 இந்தியர்களை இன்று இந்திய கப்பற்படையினர் பத்திரமாக மீட்டனர். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, உணவு மற்றும் உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேச தொலைபேசி ஆகியவை வழங்கப்பட்டது. #Cyclone #Omen #Yemen