துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து
- ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
- தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது.
இதற்காக பா.ஜ.க. கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்தவகையில் தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார். அவரை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்றனர்.
பின்னர் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை ஆகியோருடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தார்.