வேளச்சேரி- சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயிலில் பயணிப்போர் கவனத்திற்கு..!
- ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மக்களின் தினசரி பயணத்திற்கு மின்சார ரெயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
மின்சார ரெயிலில் பயணிப்பது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு பணி நடைபெறும் நேரங்களில் ரத்து செய்யப்படும் ரெயில்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி- சென்னை கடற்கரை மார்க்கத்தில் இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.