பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்... வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே... - வைரமுத்து
- பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது
- போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும்
கடந்த 2023-ம் ஆண்டு அக். 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதில் அளித்துள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
67 ஆயிரம் உயிர்களைக்
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்
பரிமாறிக்கொள்வதைப் போல
மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்
முதலில் பாலஸ்தீனத்திற்கு
உணவுப் பாதையைத்
திறந்துவிடுங்கள்
எலும்புக் கூடுகளுக்குள்
உயிர் ஊறட்டும்
கூடாரங்கள் மெல்ல மெல்லக்
குடில்களாகட்டும்
போர் விமானங்கள்
பறந்த வானில்
புறாக்கள் பறக்கட்டும்
சமாதானத்தை முன்னெடுத்த
அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஏற்றுக்கொண்ட
இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு
இருவருக்கும்
இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்
உலக நாடுகள் பல
ஒப்புக்கொண்ட வண்ணம்
பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்
"வெள்ளைப் பூக்கள்
உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி
அமைதிக்காக விடிகவே"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.