தமிழ்நாடு செய்திகள்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன? - தமிழக அரசு தகவல்

Published On 2025-07-10 07:50 IST   |   Update On 2025-07-10 07:50:00 IST
  • கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சமையலறை உள்பட 360 சதுர அடியாகும்.
  • மீதம் உள்ள 61 ஆயிரத்து 965 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

சென்னை:

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணியை தொடங்கியது. இதன்படி, தமிழகத்தில் குடிசை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கட்டி கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சமையலறை உள்பட 360 சதுர அடியாகும். ஏழைகளின் சொந்த வீடு கனவை நனவாக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.

இந்த திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 61 ஆயிரத்து 965 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News