மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் திருமாவளவன்
- பிப்.1ஆம் தேதி நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று கேட்டறிந்தார்.
இதுகுறித்து வர வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.