கூலி படத்தில் நடிச்சது நான் செய்த மிகப்பெரிய தவறு- அமீர் கானின் பதிவு உண்மையா?
- என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
- இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், கூலி படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரம் குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரஜினி சாருக்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
நான் படத்தில் ஏதோ உள்ளே வந்து ஒரு சில வசனங்களை பேசிவிட்டு மறைந்ததைப்போன்று தான் உணர்ந்தேன். உண்மையான நோக்கம் படத்தில் எதுவும் இல்லை. அதன் பின்னால் எந்த யோசனையும் இல்லை. எனது கதாப்பாத்திரம் மோசமாக எழுதப்பட்டது.
நான் இப்படத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவில்லை, எனவே இறுதி தயாரிப்பு எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியவில்லை.
எனது கதாப்பாத்திரம் ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, மக்கள் ஏன் ஏமாற்றமடைந்தார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கூலி படத்தில் நான் நடித்தது ஒரு பெரிய தவறு. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என ஆமிர் கான் கூறியதாக நேற்று தகவல்கள் பரவியது. மேலும் அவர் கூறி அது ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியானது போல ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வெளியானது. தற்போது அது ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும். ஆமிர் கான் அப்படி எந்தவித கருத்தும் முன் வைக்கவில்லை என கூறப்படுகிறது.