தமிழ்நாடு செய்திகள்

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்

Published On 2025-11-02 12:46 IST   |   Update On 2025-11-02 12:46:00 IST
  • நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
  • ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. ஆந்திராவில் கரையை கடந்த மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இது எங்கள் நாட்டு எல்லை, இங்கு மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறியதுடன், அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அத்துடன் தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் நீண்ட தூரம் வரை ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும் துரத்தியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இலங்கை கடற்படைக்கு அஞ்சி ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ராமேசுவரம் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பிரச்சனையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News