தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் பெண்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அன்புமணி

Published On 2026-02-22 11:04 IST   |   Update On 2026-02-22 11:04:00 IST
  • தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
  • மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை.

தருமபுரி:

தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருமணம் மண்டபம் கட்ட, 80 லட்சம் ரூபாயை, பா.ம.க. தலைவர் அன்புமணி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதில், ஒன்றிய பொதுநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதி உட்பட, 1.14 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம், உணவருந்தும் கூடம், சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதை, பா.ம.க. தலைவர் அன்புமணி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது, பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுப்பது என, மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.

அதற்கு பணம் கொடுத்து விட்டால் தீர்வாகி விடாது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை. கடந்த, 2021-ல், தி.மு.க. அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.

கடந்த, 12 நாளில், 16,000 கோடி ரூபாய்க்கு, 4,385 ஒப்பந்த பணிகள் போடப்பட்டுள்ளன.

ஆட்சியின் கடைசி காலத்தில் கொள்ளையடிக்கும் வேலையை, தி.மு.க.வினர் செய்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் போட்டி. தமிழகத்தில் பெண்களால், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

Tags:    

Similar News