தமிழ்நாடு செய்திகள்

குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்கியது

Published On 2026-02-22 11:03 IST   |   Update On 2026-02-22 11:03:00 IST
  • தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.
  • தமிழகம் முழுவதும் ஏராளமானோர் வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வை யாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி வெளியானது.

இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.

அதனைத்தொடர்ந்து அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த 8-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது.

தேர்வர்களுக்கான தேர்வு மைய விவரங்கள், ஹால் டிக்கெட்டில் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.

Tags:    

Similar News