கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரெயில்வேயில் கடந்த 7 மாதங்களில் ரூ.22.97 கோடி வருவாய்
- கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.