தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்- சண்முகம்
- சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- தூய்மைப் பணியாளர்களுடன் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகல் விரைவில் தீர்வு ஏற்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம் சந்தித்தார். 10-வது நாளாக தொடரும் அவர்களது போராட்டத்திற்கு அவர் முழு ஆதரவு தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களுடன் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகல் விரைவில் தீர்வு ஏற்படும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.