தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வில் எந்தெந்த தலைவர்கள் இணைவார்கள்... ஜனவரி முதல் வாரத்துக்குள் தெரியும்- செங்கோட்டையன்

Published On 2025-12-29 11:09 IST   |   Update On 2025-12-29 11:09:00 IST
  • த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது.

கோவை:

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

த.வெ.க தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அண்டை நாடுகளே வியந்து போய் இருக்கின்றன. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியானது உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் நடந்துள்ளது.

இதுவரை மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் தான் ரோடு ஷோ சென்றுள்ளனர். ஆனால் இந்த முறை இவருக்கு ரோடு ஷோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை தான் தேவை என தமிழகத்தில் உள்ள பெண்கள், இளம் வயதினர் என அனைவரும் ஒருமனதாக குரல் கொடுக்கும் காட்சியை நாம் பார்த்து வருகிறோம்.

நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டத்தை பார்க்கும் போது 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 88-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆகியோருக்கு திரண்ட கூட்டத்தை போன்று தற்போது தமிழகத்தில் விஜய்க்கு கூட்டம் வருவதை பார்க்க முடிகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றமானது எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில், விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணியை நிறைவேற்றுவோம்.

த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள். இதுவரையிலும் அந்த கருத்துக்கள் என்னை போன்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை. கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதில் அளிக்க முடியும்.

ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்வர். பொதுவாக ஒரு புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறது. ஒரு வரலாறு படைக்கிற இயக்கம். எது வேண்டுமானாலும் மக்கள் கோரிக்கை வைக்கும் போது அந்த கோரிக்கைக்கு ஏற்ப எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.

எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். த.வெ.க தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி இணைய முடியும் என தெளிவாக சொல்லிவிட்டோம்.

த.வெ.க., பா.ஜ.க மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்ற திருமாவளவனின் கருத்து வேறு. இதே தி.மு.க வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.

எங்கள் தலைவர் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசும் போது 2 கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்களும் அதற்கு கரகோஷம் அளித்தனர். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். யாரை அப்படின்னு அவர் கேட்டபோது மக்கள் சொன்னார்கள். மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார். எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

த.வெ.கவில் எந்தெந்த தலைவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்துக்குள் அத்தனையும் உங்களுக்கு தெரியும் என்றார். 

Tags:    

Similar News