தமிழ்நாடு செய்திகள்

ஜனநாயகம் செழிக்க தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்- செல்வப்பெருந்தகை

Published On 2024-12-23 12:19 IST   |   Update On 2024-12-23 12:19:00 IST
  • பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத் தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
  • ஜனநாயகம் செழிக்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நேர்மையாக, பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு கடந்த காலங்களில் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே தேர்வு செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி ஆட்சியில் செய்த திருத்தத்தின்படி, மூவர் தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியை அகற்றி விட்டு ஒன்றிய அமைச்சரை குழுவில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் மூன்றில் இரண்டு பேர் பெரும்பான்மை என்ற அடிப்படையில் எதிர்கட்சித் தலைவரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத் தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.

இந்நிலை ஏற்பட்டது தேர்தல் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து, பெரும் கேடு என்று தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அதையெல்லாம் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு தேர்தல் ஆணையமே பிரதமர் மோடியின் கைப்பாவையாக மாறி விட்டது. ஜனநாயகம் செழிக்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நேர்மையாக, பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும். அத்தகைய சூழல் ஏற்படுவதன் மூலமே இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News