தமிழ்நாடு செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும்- குடியரசு தின விழாவில் செல்வப்பெருந்தகை பேச்சு

Published On 2026-01-26 12:58 IST   |   Update On 2026-01-26 12:58:00 IST
  • எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
  • காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

சென்னை:

இந்திய குடியரசின் 77-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது:-

பா.ஜ.க தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வினர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இந்த தேசத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார். அகிம்சை முறையில் யாத்திரைகள், பேரணிகள் நடத்தி மகாத்மா காந்தியடிகள் போராடியது பிரிட்டிஷ்காரர்களைக் கலங்கடிக்கச் செய்தது.

இதெல்லாம் தெரியாத பா.ஜ.க அரசும், பா.ஜ.க தலைவர்களும், மோடியும் வரலாறு தெரியாமல் வரலாற்றுப் பிழைகளைச் செய்து வருகிறார்கள்.

இந்தக் குடியரசு தினத்தில் நாம் சபதம் ஏற்போம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்க நினைக்கும் பிரதமர் மோடி அரசை எதிர்த்து வருகிற 2-ந்தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மண்டலங்களை உருவாக்கி, மண்டலங்கள் வாரியாகப் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநிலத் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இதயத்துல்லா, பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, சுமதி அன்பரசு மாவட்டத் தலைவர்கள் கராத்தே ஆர்.செல்வம், ஜெ.டில்லிபாபு, திலகர், கவுன்சிலர் சுமதி புத்தநேசன், மாநிலச் செயலாளர் அகரம் கோபி, எம்.ஜி.ராம்சாமி, கராத்தே ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் அண்ணா நகர் தொகுதி 2-வது சர்க்கிள் சார்பில் எம்.ஆர்.ஏழுமலை தலைமையில், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.எம்.டி.ஏ.கோபி, தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பூக்கடை ஏ.தேவேந்திரன், எம்.தி.சேகர், என்.தாமஸ், பாலன், சண்முகம், காடகிருஷ்ணன், ராகுல் காந்தி, சுபாஷ், லெனின் குமார், சந்தன் பாபு, ஈஸ்வரன், சந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News