தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் வீசும் ஆழ்கடல் சூறைக்காற்று - விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை

Published On 2025-11-15 10:22 IST   |   Update On 2025-11-15 10:22:00 IST
  • ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
  • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

மண்டபம்:

வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுபடகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

அதன்படி இன்று ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

ராமேசுவரம் துறைமுக பகுதியில் திடீர் மீன்பிடி தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை ராமேசுரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

Tags:    

Similar News