வக்பு வாரிய சட்ட திருத்தத்தை பா.ம.க. ஆதரிக்கவில்லை- ராமதாஸ்
- 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.
திண்டிவனம்:
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும். கடந்த 3 மாதத்தில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்னகவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் கடும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.
இந்திய பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசும்போது மீனவர்கள் முறைவைத்து மீன்பிடிப்பது, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி ராமேஸ்வரம் வரும்போது நல்ல செய்தியை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 1118.9 கிலோ மீட்டர் பாதை அமைக்க டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூகநீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும்.
இந்தியா முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பல்கலை கழகங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக சித்த நூல்களை ஆயுர்வேத நூலாக ஆயுஷ் மாற்றியுள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் வட இந்தியர்கள் என சொல்லும் வாய்ப்புள்ளது.
எனவே மே 7-ந் தேதிக்குள் தமிழக அரசு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும். "எம்புரான்" மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர் என்கவுண்டர் சம்பவங்களால் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது தெரிகிறது.
வக்பு வாரிய திருத்த சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கவில்லை. அதனால்தான் தமிழக அரசின் தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.