தமிழ்நாடு செய்திகள்

செஞ்சியில் மழை: 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

Published On 2025-04-03 11:42 IST   |   Update On 2025-04-03 11:42:00 IST
  • நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
  • ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன.

செஞ்சி:

செஞ்சியில் இன்று அதிகாலை பெய்த மழையால் செஞ்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நெல் அறுவடை சீசன் என்பதால் அதிகமாக நெல் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று விற்பனைக்காக சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து திறந்த வெளியில்இறக்கி இருந்தனர். மேலும் நேற்று கொள்முதல் செய்யப்பட்ட வியாபாரிகளின் ஒரு பகுதி நெல் மூட்டைகளும் கமிட்டியின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைத்து போட படுமோ என்ற அச்சத்தில் வேதனை அடைந்தனர்.

ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன. ஆகையால் செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து தொடங்கி மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News