தமிழ்நாடு செய்திகள்

பழனி மலைக்கோவிலில் விஜய் பிரசார பாடலை ஒலிபரப்பிய நபர் மீது போலீசில் புகார்

Published On 2026-02-13 11:32 IST   |   Update On 2026-02-13 11:32:00 IST
  • இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது.
  • முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது.

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதில் கூட்ட நேரங்களில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், உடன் வந்தவர்களை பத்திரமாக அழைத்து செல்வது மற்றும் பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்படும். இதற்காக அடிவாரம், கோவில் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிபெருக்கி கட்டப்பட்டுள்ளது.

கடந்த 1-ந்தேதி தைப்பூச திருவிழா நடந்ததையொட்டி கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிப்பெருக்கி கட்டி மைக் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் பழனி முருகன் கோவில் யானைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் தரிசனம் செய்ய வந்த வாலிபர், மைக்செட்டில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பாடலை ஒலிக்க செய்தார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்பான அந்த வீடியோவில், யானைப்பாதையில் நிற்கும் வாலிபர், மைக்செட் அமைத்த இடத்தில் ஆள் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இருந்த விஜய் பிரசார பாடலை மைக் மூலம் ஒலிபரப்பு செய்தார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,"யானைப் பாதையில் போலீசார் சார்பில் அறிவிப்பு செய்ய மைக்செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் விஜய் கட்சியின் பிரசார பாடலை ஒலிக்க செய்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது. இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Tags:    

Similar News