நாளை காதலர் தினம்: ரோஜா பூங்கொத்துக்கள் ரூ.600 வரை விலை உயர்வு
- காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
- பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
போரூர்:
காதலர் தினம் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சிகப்பு, இளம் சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் பூக்கடைகளில் பூங்கொத்து விற்பனை களை கட்டியுள்ளதோடு கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து விற்பனை ஆகி வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து ஒரு பஞ்ச் (20 எண்ணிக்கை) விலை விபரம் வருமாறு:-
சிகப்பு ரோஜா-ரூ.600, மஞ்சள் ரோஜா-ரூ.600, வெள்ளை ரோஜா-ரூ.400, ஆரஞ்சு ரோஜா-ரூ.500, பேபி பிங்க்-ரூ.400, ஜூமா லியா-ரூ.350.
இதுகுறித்து பூங்கொத்து வியாபாரி தேவராஜ் கூறும்போது, வரத்து குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் பூங்கொத்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.
மேலும் பஸ் நிலையம் இடமாற்றம் காரணமாக புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.