கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஒரு முறை மன்னிப்பா? - தி.மு.க. ஊழலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! - அன்புமணி
- கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல.
- ஊழலில் திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப்படும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பதைப் போல, இன்னும் இரு வாரங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், கிடைத்தவற்றை எல்லாம் சுருட்டும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஒருமுறை மன்னிப்பு வழங்கப்படும்; அவர்கள் கொள்ளையடித்த கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.75 வீதம் தண்டம் வசூலிக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்காலத்தின் கடைசி நேரத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் கனிமவளக் கொள்ளை தான் தடையின்றி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1845 கருங்கல் குவாரிகள் உரிமம் பெற்று இயங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2000-க்கும் மேற்பட்ட குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கனிமக் கொள்ளைகளுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் காட்பாதர்களாக செயல்பட்டு வருகின்றனர். கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவி சாய்க்காத திமுக அரசு, கனிமக் கொள்ளையர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு முறை மன்னிப்பு திட்டத்தை ரகசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் இயற்கைவளத்துறை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 03-இன் மூலம் இந்த ஒருமுறை மன்னிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி எந்த ஊடகத்திலும் வெளிவராமல் திமுக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒழுங்குபடுத்தும் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொள்ளையடித்த கனிமத்திற்கு ஒருமுறை தண்டம் செலுத்தி விட்டு புனிதமானவர்களாகி விடலாம்.
இந்தத் திட்டத்தின்படி, உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர். உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
கனிமக் கொள்ளையர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.10 கோடிக்கும் குறைவாக இருந்தால், அதில் முதல் கட்டமாக 20% செலுத்தி விட்டு, மீதமுள்ள தொகையை இரு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் 6 சம தவணைகளில் செலுத்தினால் போதுமானது. அபராதம் ரூ.10 கோடிக்கும் கூடுதலாக இருந்தால் முதல் தவணை 20% தவிர மீதமுள்ள தொகையை இரு ஆண்டுகளில் 12 தவணைகளாக செலுத்தினால் போதுமானது. இதில் கொடுமை என்னவென்றால் கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களை அரசிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்பதும், அவற்றை வெளிச்சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்று விட்டு அதில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான தொகையை தண்டமாக செலுத்தினால் போதும் என்பதும் தான். இந்த அநீதியை கேட்பதற்கே சகிக்கவில்லை.
கட்டுமானப் பணிகளுக்காக தேவைப்படும் கருங்கல் ஜல்லியை, ஒன்றரை டன் எடை கொண்ட ஒரு யூனிட் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதாவது வெளிச்சந்தையில் ஒரு டன் கருங்கல் விலை ரூ.6,666 வரை. அதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய தண்டம் வெறும் ரூ.75 மட்டுமே. அதாவது கொள்ளையடித்த கனிமத்தின் மதிப்பில் சுமார் 1% மட்டும் தான். ஒரு டன்னுக்கு தண்டமாக வசூலிக்கப்படும் தொகையைக் கொண்டு 5 செங்கற்களைக் கூட வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை மன்னிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு, அபராதத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. மேலும் எந்த அளவுக்கு கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என அரசே கூறியிருப்பதால், உத்தேசமாக தண்டம் செலுத்தினால் போதுமானது. உண்மையாக கொள்ளை அடிக்கப்ப்பட்ட அளவு திமுக ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதால், அவர்கள் கனிமக் கொள்ளையர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை வசூலிக்க வேண்டிய விதத்தில் வசூலித்துக் கொள்வார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தாங்கள் செய்த கனிமக் கொள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், தங்களின் தொழில் பாதிக்கப் படுவதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கனிமக் கொள்ளையர்கள் அரசுக்கு அளித்த மனுவின் அடிப்படையில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரை அறிக்கை அடிப்படையில் இந்த மன்னிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் திமுக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் திட்டத்தின் பின்னணியில் பெரும் கூட்டுச் சதி நடந்திருப்பதை இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
வசிக்க இடம் இல்லாத ஏழை மக்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டால், இரவோடு, இரவாகச் சென்று கொடூரமாக அகற்றும் கொடுங்கோல் அரசு, கனிமக் கொள்ளையர்களிடம் மட்டும் இந்த அளவுக்கு இரக்கமும், கருணையும் காட்டுவது வியக்க வைக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கனிமக் கொள்ளையர்கள் வாரி வழங்கும் வெகுமதிகள் தான் இரக்கத்தை சுரக்க வைக்கின்றன என்ற புகாரை புறந்தள்ளிவிட முடியாது.
கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, திமுக காட்பதரின் ஆசியில் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்ற ஒரு பகுதி கனிமக் கொள்ளை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்காக 24 குவாரிகளுக்கு ரூ.262 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியாளர்களின் கருணைப் பார்வை பட்டவுடன் அது ரூ.13.80 கோடியாக குறைக்கப்பட்டது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் மற்றும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருமுறை தண்டமாக ரூ.321 கோடியை விதித்த திமுக அரசு, கனிமக் கொள்ளையர் அனைவரையும் மன்னித்து விட்டது. தண்டத் தொகையிலும் இதுவரை ரூ.20 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
''பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'' என்று மகாகவி பாரதியார் பாடியதைப் போல, ஊழலில் திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப்படும். ஆட்சிக் காலத்தின் கடைசியில் திமுகவினர் நடத்தும் கொள்ளைகளையும், ஊழல்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்; அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள். கனிமக் கொள்ளையர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் இந்த ஊழல் திட்டத்தின் பின்னணி பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.