தமிழ்நாடு செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம்.. சொன்னீங்களே செஞ்சீங்களா..!- நயினார் நாகேந்திரன் கேள்வி

Published On 2025-09-05 17:48 IST   |   Update On 2025-09-05 17:48:00 IST
  • திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
  • திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?

பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

சொன்னீங்களே செஞ்சீங்களா

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News