ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை: பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு
- தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
- வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.
மதுரை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்கா ளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1-ந்தேதி இந்த திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். அப்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்கின்றனர்.
எங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்து, அனுமதி இல்லாமல் தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டினர்.
பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை கேட்டனர். அதனை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.
தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும். எனவே இந்த நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்ட விரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஆர்.பாரதி கண்ணன், ஆயிரம் செல்வகுமார், மகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, அது தொடர்பான வீடியோவும் சமர்ப்பித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், ஓ.டி.பி. எண்ணை எதற்காக கேட்கிறார்கள்? ஓ.டி.பி. விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும்போது, எதற்காக ஓ.டி.பி.யை கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத்தரப்பில், தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது தி.மு.க. வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறு தான் கையாளப்படுவார்களா?
தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.
இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். அந்த விஷயங்கள் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு விட்டால் என்ன செய்வது?
ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி.யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி. விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக அறிவித்தனர். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக் கினை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.