கைதான நைஜீரியர்கள்
உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை திருப்பூரில் கைதான நைஜீரியர்கள் புழல் சிறையில் அடைப்பு
- போலீசார் நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர்.
- அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது
அவினாசி:
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அவ்வப்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் நடந்து வருகிறது.
அந்த வகையில், அவினாசியை அடுத்த கணேசபுரம் வைஷ்ணவி கார்டன் பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர்.
இதையடுத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஐகென்னா மேக்னஸ் (வயது 50), அவரது மனைவி ரீட்டா அவியான்போ (43), பிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுசுக்குவு ஜான் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.