தமிழ்நாடு செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் - மருத்துவர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

Published On 2026-01-03 09:28 IST   |   Update On 2026-01-03 10:15:00 IST
  • மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபர் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் இல்லை என்றதும் உள்ளே மருத்துவர் அறையில் மருத்துவர் உள்ளாரா? என பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31-ந் தேதி பணியில் இருந்த மருத்துவர்கள் சசிகாந்த், கவுசிக், நவின்குமார், மணிரத்னம் ஆகிய நான்கு மருத்துவர்களும் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் அன்று பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தை பிறந்த பின்பு இந்த வளாகத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என்றால் பிறக்கும் குழந்தைகளை யாராவது திருடி சென்றால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News