தமிழ்நாடு செய்திகள்

பொங்கலையொட்டி அறுவடை செய்த கரும்பில் இருந்து தித்திக்கும் மண்டை வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2025-01-02 11:03 IST   |   Update On 2025-01-02 11:03:00 IST
  • பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
  • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. இந்த பகுதியில் தயாராகும் வெல்லத்திற்கு தனி மவுசு உண்டு. குறிப்பாக செம்புகுடிப்பட்டி, அய்யனகவுண் டன்பட்டி, வலசை, கொண்டையம்பட்டி, கல்லணை, சம்பக்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் ஆலை கரும்புகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்த கரும்புகளை விவசாயிகள் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தைப் பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வெல்லம் பொங்கல் வைக்க பயன்படும் முக்கிய பொருளாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் இருந்து வந்தாலும் அலங்காநல்லூர் பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லத்திற்கு தனி மதிப்பும் சிறப்பும் உண்டு.

இதுகுறித்து கரும்பு விவசாயி கல்லணையை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-

எங்களுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட பரம்பரை பரம்பரையாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளாக ஆலையில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 5 முதல் 6 கொப்பரை வரை வெல்லம் தயாரிப்போம். தினம்தோறும் 500 கிலோ வரை வெல்லம் தயார் செய்து வருகிறோம். ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை மொத்த மார்க்கெட்டில் விலை போகிறது. 10 கிலோ கொண்ட ஒரு மணு ரூ.550 முதல் 700 வரை விலை போகிறது.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம். 20 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து ஆலையில் நாட்டு வெல்லம் தயாரித்து வருகிறோம். வருடத்தில் 10 மாதம் வரை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தவிர வேறு விவசாயிகளிடம் கரும்பு வாங்கி வெல்லம் தயாரிக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 40 டன் வரை கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு கொப்பரை வெல்லம் தயாரிப்பில் சுமார் 90 முதல் 95 கிலோ வரை வெல்லம் கிடைக்கும்.

வெல்லம் தயாரிக்கும் பணிக்கு சுமார் 6 நபர்கள் வரை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட உழுவது, பார் போடுவது, தோகை உரிப்பது, இரண்டு முறை உரம் வைப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவு மட்டும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆகிறது. கரும்பு வெட்டு கூலி, ஆலை ஆட்டு கூலி செலவு போக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கரும்பு நடவிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது. இந்த ஆலை கரும்பு அறுவடை செய்து அதை வெல்லமாக காய்ச்சி பக்குவப்படுத்தப்பட்டு மண்டை வெல்லங்களாக தயாரித்து மொத்த வியாபாரத்திற்கு மதுரைக்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த மண்டை வெல்லத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கப் பட்டாலும் பிற மாநிலங்களில், அலங்காநல்லூர் பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு தனி மவுசு தான். வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய ஊதியம் கொடுக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை.

வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். இதனால் இந்த தொழில் நலிவடைந்து போகிறது. அரசு நெல் கொள்முதலுக்கு விலை நிர்ணயித்தது போல இந்த நாட்டு வெல்லத்திற்கும் அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எங்களைப் போன்ற நேரடி விவசாயிகள் கரும்பு ஆலை தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News