கரூர் செல்லும் விஜய் - நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு
- புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
- த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் அறிவுறுத்தல்
த.வெ.க. சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என விஜய் தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.