உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகிறார்கள் - நீதிபதி செந்தில்குமார்
- சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர்.
- சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி என்.செந்தில்குமார் முன் நடைபெற்றது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும் எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜயை நீதிமன்றம் விமர்சித்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.