தமிழ்நாடு செய்திகள்

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

Published On 2025-10-10 11:15 IST   |   Update On 2025-10-10 11:15:00 IST
  • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் சில நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் இரவு வேளைகளில் மழை பெய்ததால் உஷ்ணம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களாகியும் வடகிழக்கு பருவமழைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Tags:    

Similar News