SIR மூலம் நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும்- எடப்பாடி பழனிசாமி
- எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.
- 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எஸ்ஐஆர் மூலம் நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற் வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றால் உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். மாநிலம் முழுவதும் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெற கூடாது என அதிகாரிகள் சிலர் செயல்படுவதாக புகார் எழுகிறது.
எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி செய்ய அப்பணிகளில் ஈடுபடும் மாநில அரசு அலுவலர்களுக்கு மாநில அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது.
4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இறந்த, போலி வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. போலி வாக்காளர்களை வைத்து கள்ளஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.