தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை- மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
- தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.
- புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைதான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.
அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் 3-வது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பதே உண்மையான விஷயம். அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக்கூடிய ஒன்று. பீகார் மாநில மக்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.
ஆனால் அவர்கள் மீது தமிழை திணிக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ, அதேபோல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது.
யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை.
தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது.
இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது. அதனால், கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
நான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் புதுவைக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டது.
அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தோம். தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்துதான் வருகிறது.
கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.