தமிழ்நாடு செய்திகள்

இலவச பயணம் செய்த பெண்களிடம் அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்டு

Published On 2026-02-19 10:16 IST   |   Update On 2026-02-19 10:16:00 IST
  • சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.
  • 2 பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கேயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு, பழனி, தாராபுரம், கோவை, பல்லடம், கரூர், திருச்சி, பெருந்துறை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளும் திருப்பூர், வெள்ளகோவில், முத்தூர் ஊதியூர், குண்டடம், கொடுவாய் ஆகிய பகுதிகளுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.

நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய விடியல் பேருந்து திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்வதற்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் திருப்பூரில் இருந்து காங்கேயம் வந்த டி.என். 39 என் 0659 என்ற எண் கொண்ட பேருந்தில் காங்கேயம் ஹாஸ்டல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெண்கள் சிலர் ஏறி உள்ளனர். பின்னர் கண்டக்டரிடம் மெடிக்கல் ஸ்டாப்பில் இறங்க வேண்டுமென டிக்கெட் கேட்டுள்ளனர்.

அதற்கு அந்தப்பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 ஸ்டாப் தானே உள்ளது, ஏன் நடந்து செல்ல முடியாதா? என அந்த பெண்களிடம் பேசியதுடன் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது, நேராக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றோம். அங்கு பயணச்சீட்டு பரிசோதனையாளரிடம் உங்களை விட்டு விடுகிறோம் , நீங்கள் எல்லாம் அபராதம் ரூ.500 கட்டினால் மட்டும்தான் திருந்துவீர்கள் என கூறியதுடன்,நேராக பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

இதனால் கண்டக்டருக்கும், பெண் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதனிடையே இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழக அரசு, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என அறிவித்துள்ள நிலையில், நகரப்பேருந்துகளில் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பெண்களிடம் இழிவாக பேசி அநாகரீகமாக நடந்து கொள்வது பெண்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே காங்கயத்தில் பெண் பயணிகளை இழிவாக பேசிய டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 2பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் 2பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News