அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்- ஜி.கே.மணி
- தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
- அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது.
சேலம்:
சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலத்தில் நாளை காலை 10 மணிக்கு பா.ம.க.வின் செயற்குழுவும், 11.30 மணிக்கு பொதுக்குழுவும் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தமிழகம் எதிர்பார்த்து உள்ளது.
ராமதாசால் பா.ம.க.வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். பா.ம.க.வை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளாலும் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளார். அன்புமணியால் தூண்டிவிடப்பட்ட சிலரின் அவதூறு பேச்சால் நிறுவனர் நிலைகுலைந்து போயுள்ளார். சூழ்ச்சியால் பா.ம.க.வை அபகரிக்க பார்க்கிறார்கள்.
தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார். கட்சியை வலிமையாக்க ராமதாஸ் எடுக்கும் முயற்சிகளை கண்டு ராமதாசை விட்டு அன்புமணியிடம் சென்ற நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ராமதாஸ் உடன் வருவார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் ராமதாஸ்தான். தற்போது ராமதாசுக்கு பெரிய சோதனை வந்துள்ளது. ஆனால் வரும் தேர்தலில் ராமதாஸ் சொல்பவர்களுக்குதான் பாட்டாளி மக்கள் வாக்களிப்பார்கள். ராமதாசின் நேற்றைய உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. ராமதாசின் உருக்கமான பேச்சு வரும் தேர்தலில் வாக்காக மாறும். தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டுள்ளார். ராமதாஸ் அமைக்கும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி; அந்த கூட்டணிதான் ஆளுங்கட்சியாக ஆட்சியை பிடிக்கும்.
என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியால் பா.ம.க.வில் இருந்து யாரையும் நீக்க முடியாது. தற்போது வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை யாரிடமும் பேசவில்லை. பா.ம.க தனித்துப் போட்டி அல்ல. நிச்சயம் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் சேர 3 பக்கம் இருந்து ராமதாசுக்கு அழைப்பு வந்துள்ளது.
அன்புமணியை நம்பவில்லை; பொதுநலத்துடன் செயல்படும் ராமதாசை தான் நம்புகிறார்கள். பா.ம.க.வின் செயற்குழுவை நடத்தக் கூடாது என சொல்ல அன்புமணிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அன்புமணியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அவரின் வளர்ச்சியையும் பாதிக்கும். ராமதாசை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்; ஆட்சி அமைக்க முடியும். அன்புமணிக்கு பின்னால் சில நிர்வாகிகள்தான் உள்ளார்களே தவிர பா.ம.க.வின் உண்மை தொண்டர்களோ, பொதுமக்களோ கிடையாது. அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அன்புமணி உடன் உள்ள நிர்வாகிகள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.