தமிழ்நாடு செய்திகள்

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி சிறுமி பலி

Published On 2025-07-23 12:32 IST   |   Update On 2025-07-23 14:37:00 IST
  • வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார்.
  • சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உழவன்கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார். அப்போது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த அவரது தாய் சோனியா அலறியடித்து வந்து பார்த்தபோது மகள் அர்திகா பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக சிறுமி அர்திகாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமி அர்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுமி சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகலறிந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உழவன்கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வந்த அதியமான்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது அரசு பஸ் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News