தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழு அமைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
- ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
- கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.