திமுக கூட்டணியை நம்பி.., நாங்கள் மக்களை நம்பி: கோவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- எப்போது பார்த்தாலும் அதிமுக-வில் பிரச்சினை இருக்கிறது என பேசுகிறார்கள். பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை.
- திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறது.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டப்பட்டன. திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தது. 1100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 3ஆவது கூட்டு நீர் திட்டம் அதிமுக-வால் தொடங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. திறந்து வைத்தது திமுக. திமுகவால் திட்டத்தை கொண்டு வர முடியாது.
கூட்டணி பலமாக இருக்கிறது என ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். நீங்கள் கூட்டணியை நம்பி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள்தான் வாக்களித்து ஆட்சியை அமைக்க முடியும். கூட்டணி அல்ல.
திமுக கூட்டணியில் உள்ள குட்டி கட்சிகள்... கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது.
முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்கிறீர்களே, எப்படி என்கிறார்கள். தேர்தல் மூலம்தான் மீட்போம். ஏனென்றால் கொடூமையான, கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய பிரச்சினையை தீர்க்க முடியாத அரசாங்கம். திறமையற்ற அரசாங்கம். பொம்மை முதல்வராக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
ஆகவே, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். தமிழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிகொண்டிருக்கிறது. அதில் இருந்து தமிழகத்தை மீட்போம். அதுதான் லட்சியம். ஆகவே முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போன்று எங்கள் கட்சியை நினைத்து விடாதீர்கள்.
எப்போது பார்த்தாலும் அதிமுக-வில் பிரச்சினை இருக்கிறது என பேசுகிறார்கள். பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறது.
திமுக ஆட்சியில் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இப்படியோ போய்க்கொண்டிருந்தால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.