ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பூதவுடலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினோம். இளங்கோவன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டோம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"தமாகா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மீண்டும் இணைய முக்கிய காரணமாக இருந்தவர் ஈ.வி.கே.எஸ்" என்று நேரில் அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர், "தனது கடைசி மூச்சு வரை மக்களுக்காக பணியாற்றியவதலைவர் அவர்" என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து இளங்கோவன் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. மாநில காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டத்தை பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.