தமிழ்நாடு செய்திகள்

தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-09 11:31 IST   |   Update On 2025-08-09 11:31:00 IST
  • தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.
  • மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் விழாக்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி குறை தீர்க்கும் சேவைகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 2 விழாக்களில் பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 400 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார்.

அதன் பிறகு பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் சேர்மன், இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

இதே போல் பல்லாவரம் மேடைக்கு வரும் போது கண்டோன்மெண்ட் குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் பழைய டிரங்க் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News