தமிழ்நாடு செய்திகள்

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Published On 2025-11-16 07:37 IST   |   Update On 2025-11-16 07:37:00 IST
  • மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
  • இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

சென்னை:

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் 10 மணி மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News