தனியார் பள்ளியில் 'மார்க்ரேட்' என்ற பெயரில் AI ஆசிரியர் அறிமுகம்
- மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
- மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம்:
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.
இது குறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம் கூறியதாவது.:- மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஐ. ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் முரளிதரன், அப்துல் ஜபார், டி.ஆர்.ஓ. நேர்முக உதவியாளர் சாமிநாதன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மீனவ பிரதிநிதி சேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.