தமிழ்நாடு செய்திகள்

போதைப்பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது

Published On 2025-06-26 13:53 IST   |   Update On 2025-06-26 13:53:00 IST
  • விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
  • கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

விசாரணையில், நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் CODE WORD-ல் பேசியிருந்தது தெரியவந்தது.

இதன்மூலம் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் வாங்குவதற்கு நடிகர் கிருஷ்ணா தனது கார் ஓட்டுநரின் செல்போன் எண்ணை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துள்ளதால் இவ்வழக்கில் தொடர்பில் உள்ளவர்களின் பட்டியல் நீளும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News