தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் தீ வைத்த வாலிபர் கைது

Published On 2024-04-10 05:36 GMT   |   Update On 2024-04-10 05:36 GMT
  • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
  • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News